கோயில் திருக்குளம் சீரழித்து கழிவுநீர் கால்வாய்…

திருவள்ளூர் மாவட்டம்- பொன்னேரி அருகே கோவில் திருக்குளத்தை சேதப்படுத்தும் வகையில் கழிவு நீர் கால்வாய் கட்டும் நகராட்சி அதிகாரிகளின் நடவடிக்கைக்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு அதன் புனிதம் பாதிக்கும் எனவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னனால் கட்டப்பட்ட இதன் கருவறையில் சுயம்பு வடிவாக தோன்றிய சிவபெருமான் லிங்க வடிவில் காட்சியளிக்கிறார்.

மேலும், ஆலயத்தின் முன்பாக உள்ள ஆனந்த புஷ்கரணி என்னும் திருக்குளத்தில் சிவபெருமானின் சாபத்திற்கு ஆளான பார்வதி தேவி நாரத முனிவரின் ஆலோசனைப்படி தென்னகப் பகுதி வழியாக காசிக்குச் சென்று கொண்டிருந்த அகத்திய மாமுனிவரை அணுகி தனது சாபம் விலக பரிகாரம் கேட்டதால் அவரது ஆலோசனைப்படி இங்குள்ள தாமரை திரி குளத்தில் (ஆனந்த புஷ்கரணி தீர்த்தத்தில்) புனித நீராடி 11 அமாவாசைகள் சுயம்பு லிங்கத்தை பூஜித்து வழிபட்டதால், பார்வதி தேவியின் பூஜையில் மனம் மகிழ்ந்த சிவபெருமான் ஆனந்த புஷ்கரணி தீர்த்தத்தில் எழுந்தருளி பார்வதி தேவியின் சாபத்தை நீக்கி அன்னையை அனைத்தெழுந்த கோலமாக அகத்திய மாமுனிவருக்கு காட்சியளித்து தம்பதியர் சமேதரராக பார்வதி தேவியுடன் கைலாயம் சென்றதாக இதன் தலபுராணம் கூறுகிறது.

இதன் காரணமாகவே இக்குளத்திற்கு ஆனந்த புஷ்கரணி என்றும், ஆலயத்தில் எழுந்தருளியுள்ள அம்பிகைக்கு ஆனந்தவல்லி என்ற திருப்பெயரும் ஏற்பட்டது. பார்வதி தேவி நீராடிய ஆனந்த புஷ்கரணி திருக்குளத்தில் இதுவரை தண்ணீர் வற்றியதில்லை என்பது மற்றொரு சிறப்பாக கருதப்படுகிறது. இந்த குளத்தை சுற்றியுள்ள குடியிருப்பு வாசிகள் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும், வகையில் குப்பை கழிவுகளை குளத்தில் கொண்டு வந்து வீசுவதாலும், கழிவு நீரை குளத்தில் விட்டு சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் நிலையை தவிர்க்கும் பொருட்டு, கடந்த ஆண்டு சிவ அடியார்கள் சிலர் தாமாக முன்வந்து, தங்கள் சொந்த பணத்தில் குளத்தை சுற்றி மதில் சுவர் எழுப்பினர். இந்த நிலையில் பொன்னேரி நகராட்சி அதிகாரிகள் ஆனந்த புஷ்கரணி திருக்குளத்தை சுற்றிலும் கழிவு நீர் கால்வாய் அமைப்பதற்காக அதன் அருகிலேயே ஜேசிபி இயந்திரம் மூலம் நீளமாக பள்ளம் எடுத்துள்ளனர். இதனால் ஏற்பட்ட அதிர்வின் காரணமாக ஒரு சில இடங்களில் குளத்தைச் சுற்றி கட்டமைக்கப்பட்ட கருங்கற்கள் விலகி உள்ளது. இதனால் மன வேதனை அடைந்த பக்தர்கள் திருக்குளத்தை சுற்றி கழிவுநீர் கால்வாய் அமைத்தால் அதன் புனிதம் கெட்டுவிடும் என்பதாலும், நீர்நிலைப் பகுதிகளில் எந்த ஒரு கட்டுமான பணிகளையும் மேற்கொள்ள கூடாது என்ற உச்சநீதி மன்ற அறிவுறுத்தலை கருத்தில் கொள்ளாமலும், எந்த ஒரு மத வழிபாட்டு தளங்களின் புனிதத்திற்கு பங்கம் ஏற்பட்டு விடக்கூடாது என்ற அரசியல் சாசன விதிமுறைகளை புறம் தள்ளி விட்டு, தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பொன்னேரி நகராட்சி அதிகாரிகள் பக்தர்களின் எதிர்ப்பையும் மீறி செயல்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. மேலும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்திய பின்னரும், ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவரின் தூண்டுதலின் பேரில் கழிவுநீர் கால்வாயை கட்டியே தீர வேண்டும், என்ற எண்ணத்துடன். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கோவில் முன்பாக கொட்டப்பட்டுள்ள கட்டுமான பொருட்களை அங்கிருந்து அப்புறப்படுத்தாமல், குளத்தைச் சுற்றி தோண்டிய பள்ளத்தை மூடாமலும் அலட்சியம் காட்டி வருவதற்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். விதிகளுக்கு புறம்பாக வழிபாட்டு தளத்தின் புனிதத்தை கெடுக்கும் வகையில் கழிவு நீர் கால்வாய் கட்டுவதற்கான திட்டத்தை வகுத்துக் கொடுத்த நகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருவள்ளூர் மாவட்ட மக்கள் மேம்பாட்டு சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

P.K.M

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *