

தமிழக – ஆந்திர எல்லை பகுதியான கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நவீன சோதனைச்சாவடியில் வாகனங்களுக்கு உரிமம் வழங்குவதில் லஞ்சம் பெறப்படுவதாக லாரி உரிமையாளர்கள் தரப்பில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர்கள் தேவநாதன், தமிழ் அரசி, மாலா உள்ளிட்ட 12 பேர் கொண்ட குழுவினர் இந்த சோதனைச்சாவடியில் அதிகாலை 2 மணியளவில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
தமிழ்நாட்டில் இருந்து ஆந்திரா நோக்கி செல்லக்கூடிய வாகனங்கள், ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்குள் வரும் வாகனங்கள் உரிமம் பெற வேண்டி சமர்ப்பித்த விண்ணப்பங்கள், அதற்கு அளிக்கப்பட பெர்மிட் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அதற்கான கட்டண தொகை கணக்கீடு செய்யப்பட்டது.
இந்த கணக்கீட்டின் படி தமிழகத்திலிருந்து ஆந்திர மாநிலம் செல்லக்கூடிய சோதனை சாவடியில் கணக்கில் வராத 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயும், அதே போல் ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகம் வரக்கூடிய பகுதியில அமைந்துள்ள சோதனைச் சாவடியில் 1,12,000 ரூபாய் என மொத்தம் நாலு லட்சத்து 32 ஆயிரம் ரூபாயை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த கணக்கில் வராத பணம் குறித்து போக்குவரத்து சோதனைச்சாவடி மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் உதவியாளர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கணக்கில் வராத பணம் வைத்திருந்த போக்குவரத்துத்துறை ஊழியர்கள் மீது துறைரீதியிலான ஒழுங்கு நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்படும் என லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முத்துவேலன்
