
மத்திய அரசின் S.S.A. கல்வி நிதி ஒதுக்கீட்டில் உள்ள குளறுபடி (ம) சட்ட விரோத நடவடிக்கையை கண்டித்து திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் (காங்கிரஸ்) அவர்கள் தொடர் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வருகிறார். அந்த வகையில் இன்று (30.08.2025) இரண்டாவது நாள் போராட்டம் ஆகும். இந்நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் உண்ணா நிலை மேற்கொண்ட இடத்திலேயே சற்றுமுன் மயங்கி சாய்ந்தார். அருகில் இருந்த கட்சியினரும், பொதுமக்களும் எம்.பி., சசிகாந்த் செந்திலை திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சசிகாந்த் செந்தில், தீவிர மருத்துவ சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். சசிகாந்த் செந்திலை சந்தித்து, பொதுப்பள்ளிக்கான மாநிலமேடை பொதுச்செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வந்தநிலையில், S.S.A. கல்வி நிதி ஒதுக்கீட்டின் பின்னணி குறித்து, பொதுப் பள்ளிக்கான மாநில மேடை வெளியிட்டுள்ள அறிக்கையை இப்போது பார்ப்போம்.
👇
“சமக்ரா சிக்சா அபியான் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை எந்த நோக்கத்திற்காக செலவிட நாடாளுமன்றம் ஒப்புதல் தந்ததோ, அந்த நோக்கத்திற்காக நிதியை மாநில அரசிற்கு பகிர்ந்து தராமல், நிபந்தனை விதிப்பதும், அதை ஏற்க மறுக்கும் மாநில அரசுகளுக்கு நிதியை வழங்காமல் ஒன்றிய அரசு நிறுத்தி வைப்பதும்; நாடாளுமன்றத்தை அவமதிக்கும் நடவடிக்கை. நாடாளுமன்ற ஜனநாயகத்தையும், கூட்டாட்சித் தத்துவத்தையும், சீர்குலைக்கும் முயற்சியாக ஒன்றிய அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது.
மாநில அரசின் பள்ளிகளை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக உருவானதே பி.எம்.ஶ்ரீ. பள்ளித் திட்டம். இந்த திட்டத்தின் மூலம் பல லட்ச மாணவர்கள் படிக்கும் அரசுப் பள்ளிகளில், சிலருக்கு மட்டுமே உயர் கல்வி வாய்ப்பை உருவாக்கித் தருவதால், பி.எம்.ஶ்ரீ பள்ளித்திட்டம் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 14 மற்றும் 21 க்கு எதிரானது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 41 அரசின் பொருளாதார வளர்ச்சியைப் பொறுத்து கல்வி உரிமையாக மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று அரசுக்கு வழிகாட்டுகிறது.
பள்ளிக் கல்வியைக் கூட பாகுபாடு இல்லாமல் கொடுக்க இயலாது என்று கூறும் தேசியக் கல்விக் கொள்கை 2020; அதை முழுமையாக நடை முறைப் படுத்தும் சோதனைப் பள்ளிகளாக பி.எம்.ஶ்ரீ பள்ளிகள் முன்னிறுத்தப் படுவதால் மாநிலங்கள் இத்திட்டத்தை ஏற்க மறுக்கிறது.
பி.எம்.ஶ்ரீ திட்டத்தை ஏற்றால், மாநில அரசின் பள்ளிகள் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் சென்றுவிடும். பல ஆயிரம் மாநில அரசுப் பள்ளிகள் நலிந்து, பி.எம்.ஶ்ரீ பள்ளிகள் மட்டுமே இயங்கும் சூழல் உருவாகும். அத்தகைய சூழலில் சைனிக் பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைத்தது போல், பி.எம்.ஶ்ரீ பள்ளிகளின் நிர்வாகத்தை தனியாரிடம் ஒன்றிய அரசு ஒப்படைக்கும் அபாயம் உள்ளது. அரசு முழுமையாக கல்வி தரும் பொறுப்பில் இருந்து விலகிவிடும்.
பி.எம்.ஶ்ரீ பள்ளிகளில் 3 வயதில் சேர்க்கப்படும் மாணவர்கள், 18 வயதில் பள்ளிப் படிப்பை முடித்து வெளியே வரும் போது, சமஸ்கிருத பண்பாட்டை அடிப்படையாகக் கொண்ட, ஒற்றைப் பண்பாட்டு தேசமாக இந்தியாவை ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு தயார் செய்யப்படுவார்கள். அரசின் தலைமை பொறுப்பில் இருப்பவர் சொல்வதைக் கேள்வி கேட்காமல் ஏற்கும் மனப்பக்குவம் கொண்ட, மக்கள் திரள் உருவாக்குவதே பி.எம்.ஶ்ரீ பள்ளிகளின் அடிப்படை நோக்கம்.
பி.எம்.ஶ்ரீ பள்ளிப் படிப்பின் இறுதித் தேர்வு உயர் கல்விக்கு தகுதியாக இருக்காது. ஆகச் சிறந்த பள்ளிகள் என்ற முத்திரையுடன் இயங்கும் பி.எம். ஶ்ரீ பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், உயர் கல்விக்கு செல்ல வேறொரு தகுதித் தேர்வு எழுதி தங்களைத் தகுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.
ஒட்டு மொத்த கல்வியையும் வணிகச் சந்தையிடம் ஒப்படைத்து, ஒற்றைப் பண்பாட்டு தேசமாக இந்தியாவை மாற்றும் சூழ்ச்சியே தேசியக் கல்விக் கொள்கை 2020 என்பதை மக்கள் முன் அம்பலப்படுத்த; திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சசிகாந்த்செந்தில் அவர்கள்; காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டுள்ளார்.
தனது தியாகத்தின் மூலம் இந்திய இளைஞர்களின் மனசாட்சியை தட்டி எழுப்பிய பகத்சிங் பாதையில், மத்திய அரசின் மக்கள் விரோத கல்விக் கொள்கையை இந்திய இளைஞர்கள் உணர்ந்து கொள்ள ஒரு பெரும் வாய்ப்பாக, தேசப் பிதா மகாத்மா காந்தியடிகள் வழியில் உண்ணாநிலை அறப்போராட்டத்தை தொடங்கி உள்ளார் திரு. சசிகாந்த் செந்தில்.
சட்டரீதியான நடவடிக்கை மூலம் மக்களின் சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும் என்று கூறிய அண்ணல் அம்பேத்கர் அவர்கள், சட்டத்தின் படி ஆட்சி நடக்கவில்லை என்றால் உண்ணாநிலை போன்ற வடிவங்களில் அரசின் கொள்கையுடன் ஒத்துப் போக இயலாது என்பதை உணர்த்தும் போராட்டம் நடத்த வேண்டிய சூழல் உருவாகும் என்பதை உணர்த்திச் சென்றுள்ளார்.
இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்படும் ஒன்றிய அரசு, தனது போக்கை மாற்றிக் கொண்டு, நாடாளுமன்ற ஜனநாயகத்தையும், கூட்டாட்சித் தத்துவத்தையும் மதித்து நடக்க இந்திய இளைஞர்கள் ஓரணியில் நின்று குரலெப்ப வேண்டும்.இது தனி நபர் சாகசம் அல்ல. இந்தியா என்ற கோட்பாட்டை காக்கின்ற போராட்டம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் பேசியும் பயனற்ற சூழலில், பொறுப்புமிக்க மக்கள் பிரதிநிதியாக திரு. சசிகாந்த் செந்தில் அவர்கள் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டுள்ளார்.
நாடாளுமன்ற ஜனநாயக மாண்பையும், கூட்டாட்சித் தத்துவத்தையும் காத்திட இந்திய மக்கள் ஓரணியில் திரண்டிட வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது”…. இவ்வாறு அந்த அறிக்கையில் சொல்லப் பட்டுள்ளது.
மேலதிக விபரம் பெற: பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு, பொதுச்செயலாளர்,
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை,
தி.நகர், சென்னை – 600 017
மின்னஞ்சல்: spcsstn2025@gmail.com
தொடர்பு: 94456 83660
