
சிறுவாபுரி அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேகத்தில் பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் உள்ளது. சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்களால் கட்டப்பட்ட இக்கோவிலின் கும்பாபிஷேகத்திற்கான யாக கலச பூஜைகள் கடந்த மூன்று தினங்களாக நடைபெற்று வந்தது.
நிறைவு நாளான இன்று வாஸ்து சாந்தி, காப்பு கட்டுதல், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட மூன்று கால பூஜைகளுடன் சிறப்பு யாகம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க வைணவ சான்றோர் முக்கிய புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்த கலசங்களை தங்களது சிரம் தாங்கி பிரகார வலம் வந்து அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்தை வெகு சிறப்பாக நடத்தி வைத்தனர்.
அப்போது கூடியிருந்த பெருந்திரள் பக்தர்கள் பக்தி பரவசத்தில்,
ஓம் நமோ நாராயணா, ஓம் நமோ நாராயணா, கோவிந்தா, கோவிந்தா; என எழுப்பிய கோஷம் வைகுண்டத்தை எட்டியது போன்று அமைந்தது.
இதனையடுத்து அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீப ஆராதனைகள் நடைபெற்றன. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
பொன்.கோ.முத்து

