
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில், உடல் நலம் குன்றிய போது தனக்காக பிரார்த்தனை செய்த தொகுதி மக்களுக்கு கண்ணீர் சிந்தியபடி அதிமுக வேட்பாளர் பலராமன் நன்றி தெரிவிக்க; அதைப் பார்த்த பொதுமக்களும் கதறி அழுதது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி (தனி) சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் ஜனப்பன் சத்திரத்தில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும்-தொகுதி பொறுப்பாளருமான, கே. பாண்டியராஜன் கலந்துகொண்டு, முறைப்படி அதிமுக வேட்பாளர் சிறுனியம் பி. பலராமனை கூட்டணி கட்சியினருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து ஏற்புரை ஆற்றிய அதிமுக வேட்பாளர் சிறுனியம் பலராமன், இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது தொகுதிக்கு செய்த சாதனைகள் குறித்து எடுத்துரைத்து பேசிய அவர், சோதனையான காலகட்டங்களில் எல்லாம் தனக்கு கட்சித் தொண்டர்கள் தோள் கொடுத்து துணை நின்றதை குறிப்பிட்டு உருக்கமாக பேசிய அவர், தான் உடல் நலம் குன்றி இருந்தபோது தொகுதி மக்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவனாக சகோதரனாக நினைத்து தனக்காக பிரார்த்தனை செய்ததை நினைவுகூர்ந்து மனம் உருகி கண்ணீர் மல்க கும்பிட்டார். அதைப்பார்த்த தொகுதி மக்களும், அதிமுக தொண்டர்களும், கண்ணீர் விட்டு கதறினர், இதனைப் பார்த்து கூட்டணி கட்சி நிர்வாகிகள் வியந்து நின்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழ்முத்து
