
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய விண்வெளி ஆய்வகத்தின் மேனாள் இயக்குநர், அறிவியலாளர் மயில்சாமி அண்ணாதுரை வந்திருந்தார்.
‘நாட்டில் ஏராள நோய்கள் புதிது புதிதாக முளைக்கிறது, அதற்கும் தீர்வு இல்லை; மக்கள் வறுமையைப் போக்கவும் தீர்வு இல்லை… அதே வேளையில், பிறஉலக நாடுகளைப் பார்த்து சந்திரனுக்கும் சூரியனுக்கும் ராக்கெட்டுகளை விடுவதால் மக்களின் அடிப்படை தேவைகளுக்கு தீர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளதா?”
என்று அடுக்கடுக்காக கேள்விகளை செய்தியாளர்கள் முன்வைத்தனர்.
அனைத்து கேள்விகளுக்கும் பொறுமையாக தெளிவாக பதிலளித்தார், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை. (வீடியோ)
“சந்திராயன் மூன்று, விண்ணில் செலுத்திய பின்னர் உலகமே இந்தியாவை வியந்து பார்க்கிறது. மாணவர்களிடம் அறிவியல் குறித்த பார்வை அதிகரித்து உள்ளது. உலகம் வெப்பமயம் ஆகி வரும் சூழலில் எப்படி அமெரிக்க கண்டம் கண்டறியப்பட்டு மனிதர்கள் அங்கு குடியேறினார்களோ அதேபோன்று, அடுத்த கட்டமாக நிலவில் மனிதர்கள் செல்லக் கூடிய இலக்கு தமிழகத்தில் குலசேகர பட்டினத்தில் இருந்து ஏவுகணை முயற்சியாக உருவாகலாம். உடல் வளர்ச்சிக்கு உணவு எப்படி தேவையோ அதே போன்று மனித குல வளர்ச்சிக்கு அறிவியலும் தேவைப்படுகிறது. சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சை பூமியிலேயே உருவாக்கி மனிதர்களுக்கு பயன்படும் வகையிலான மூலப்பொருள் நிலவில் இருக்கிறது, அதனை கையாள அறிவியல் தேவைப்படுகிறது. மக்களின் ஆரோக்கியத்தையும் சுகாதாரத்தையும் அதற்காக புறந்தள்ள முடியாது, பிற நாடுகளைப் பார்த்து இந்தியா விண்கலம் செலுத்தவில்லை, நிலவின் சுற்றுப் பாதையை கண்டறிவதற்காகவே விண்கலம் செலுத்துகிறோம்” – என்றார் மயில்சாமி அண்ணாதுரை.
பொன்.கோ.முத்து

