
சென்னை புழல் ஒன்றியத்திற்கு உட்பட்ட வடகரை பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
அரசு வழங்கும் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பெற்று வரும் இவர்களுக்கு குடும்பஅட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, மின் இணைப்பு ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் வீட்டுமனைப்பட்டா வழங்கக் கோரி கடந்த ஐந்து ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் வட்டாட்சியர் முதல் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வரை தொடர்ந்து மக்கள் குறைகேட்பு ஜமாபந்தியின் போது கோரிக்கை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக குற்றஞ் சாட்டுகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக வீட்டுமனைப் பட்டா வழங்கக்கோரியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கம்யூனிஸ்ட்டுகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் உழைப்போர் உரிமை இயக்க மாநில பொதுச் செயலாளர் எஸ். ஜானகிராமன் தலைமையில் ஒன்று கூடினர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் அப்போது ஈடுபட்டனர். பட்டா வழங்காமல் அலட்சியம் காட்டி வரும் அதிகாரிகளை கண்டித்தும், தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
மேலும் பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அவர்கள் எச்சரித்தனர்.
PKM
