மாற்றுத்திறனாளிவாழ்வு வளம்பெற|

உலக மாற்றுத்திறனாளிகள் தினமான டிசம்பர் -3 ஆம் நாளன்று, மாற்றுத் திறனாளிகளுக்கான விடியலை முன் வைத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்மாநிலப் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை :

கண்ணியம் மற்றும் சமத்துவமிக்க வாழ்க்கைக்கான தேடலுடன் வாழும் எண்ணற்ற பல்வேறு வகை மாற்றுத் திறனாளிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது உலக தின வாழ்த்துகளை உரித்தாக்குகிறது.

உரிமைகளுக்காகவும், சகோதரத்துவத்திற்காகவும் உலகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் போராடும் காலமாக மாறி வருகிறது. இஸ்ரேல், பாலஸ்தீன நாட்டில் கடந்த இரண்டாண்டுகளில் அதிகபட்சமாக குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டு 70,000 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை கொன்று குவித்துள்ளது. குண்டு வீச்சுகளால் 1.75 லட்சம் மக்களை காயப்படுத்தி, ஐ.நா.மீட்பு மற்றும் நிவாரண முகமையின்படி புதிய மாற்றுத்திறனாளிகளின் உயர்வு 35 சதவிகிதம் ஆகும். கை, கால்கள் துண்டிக்கப்பட்ட அதிக மாற்றுத்திறன் குழந்தைகள் தற்போது காஸாவில்தான் உள்ளனர்.

இஸ்ரேலின் மிருகத்தனமான இந்த செயல்களை கண்டித்து போராடிய மக்களுடன் இணைந்து மாற்றுத் திறனாளிகளும் போராடினர். அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் நடைபெற்றுள்ள இத்தகையப் போராட்டங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை.

இந்தியாவில் பிற்போக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரதிநிதியான மோடி தலைமையிலான பாஜக அரசு தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளை வஞ்சித்து வருகிறது. “ராஷ்டிரிய கோகுல் மிஷன்” என்கிற மாடுகளை பராமரிக்கும் திட்டத்துக்கு ரூ.3,400 கோடி ஒதுக்கும் மோடிஅரசு,கோடிக்கணக்கான மாற்றுத்திறனாளிகளுக்கு வெறும் ரூ.1,275 கோடி மட்டுமே நடப்பு நிதி ஆண்டில் ஒதுக்கி உள்ளது. இது உள்நாட்டு உற்பத்தியில் 0.025 சதவிகிதம் மட்டுமே.

ஒன்றிய பாஜக அரசு நிதி ஒதுக்கீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓரவஞ்சனை, பல்நோக்கு அடையாள சான்று, அந்த்யோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டை, உரிமைகள் சட்ட விதிகளை அமலாக்குவதற்கான திட்டம் என அனைத்தும் ஸ்தம்பித்துள்ளது. ஒன்றிய அரசு மாத உதவித்தொகையாக குறைந்தபட்சம் ரூ.5000 வழங்க வேண்டும்; ஒவ்வொரு துறையும் தனியாக 5 சதவிகிதத்தை மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதலாக ஒதுக்க வேண்டும்; 100 நாள் வேலை திட்டத்தில் உரிமைகள் சட்டப்படி 25 சதவிகித வேலை நாட்களை கூடுதலாக ஒதுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

அரசுப் பணிகளில் 2 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் தற்காலிக மாற்றுத்திறனாளி ஊழியர்களை 2008-ல் போடப்பட்ட அரசாணை 151-ன் படி நிரந்தரப்படுத்த வேண்டும். அவர்களை வஞ்சிக்கும் அரசாணை 24-ஐ வாபஸ் பெற வேண்டும்.

தமிழகத்தில் ஆளும் திமுக அரசு, ஆந்திராவைப் போன்று குறைந்தபட்சம் ரூ.6000 என உடனடியாக உதவித்தொகை உயர்த்தி வழங்குவதுடன், உதவித் தொகைக்காக விண்ணப்பித்துக் காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் உடனடியாக உதவித் தொகை வழங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

கல்வி, வேலை வாய்ப்புகள் தனியார் நிறுவனங்களிலும் 5 சதவிகிதம் இடங்களை உத்தரவாதப்படுத்தி தமிழகத்திலும் சட்டம் இயற்ற வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் ஏற்கனவே இருந்தபடி 4 மணி நேர பணிக்கு முழு ஊதியம் என்பதற்கான உத்தரவு கீழ்மட்ட அதிகாரிகளுக்கு பிறப்பித்து நடைமுறைப்படுத்த வேண்டும். ஏற்கனவே இருந்ததைப் போன்று காலாண்டுக்கு ஒரு முறை சிறப்பு குறைதீர் கூட்டங்களை மாநில வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையிலேயே நடத்த வேண்டும் உள்ளிட்ட மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளை வழங்கிட வேண்டும். போராடும் மாற்றுத் திறனாளிகளுக்கான சங்கங்களுடன் உரிய பேச்சுவார்த்தைகள் நடத்தி கோரிக்கைகளை மாநில அரசு தீர்க்க முன்வர வேண்டும். மாறாக காவல் துறையை ஏவி போராட்டங்களை ஒடுக்கவும், மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதையும் மாற்றிக் கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. கோடிக்கணக்கான மாற்றுத் திறனாளிகளுக்கு சமத்துவமிக்க வாழ்க்கையை உறுதிப்படுத்தும் போராட்டங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக நிற்கும். அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாற்றுத்திறனாளிகள் உலக தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது – இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தோழன்

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *