
திருப்போரூர் அருள்மிகு திரௌபதி அம்மன் திருக்கோயிலில் அக்னி வசந்த மகாபாரத விழாவையொட்டி, மகாபாரத சொற்பொழிவும், இரவில் மகாபாரத கூத்தும் நடைபெற்று வருகிறது.
திருப்போரூர் ஆதிதிராவிட பெருங்குடி மக்கள், அருள்மிகு திரௌபதி அம்மன் திருக்கோயிலின் உபயதாரராக இருந்து விழாவின் முதன்மை நிகழ்வான கர்ண மோட்சம் எனும் மிக முக்கியமான தெருக்கூத்தையும், அன்றைய தின உற்சவத்தையும் பொறுப்பேற்று நடத்தி வருகின்றனர்.
இந்த மகாபாரத சொற்பொழிவு ஆற்றிவரும் பாரதியார், இசையாளர் மற்றும் கோயில் அர்ச்சகர் ஆகியோருக்கு ஆதிதிராவிட பெருங்குடி பொதுமக்கள் சார்பில் பொன்னாடை போர்த்தி, வேட்டி, பட்டு வஸ்திரம் வழங்கி சிறப்பு செய்தனர். அதன் பின் திரௌபதி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்து வணங்கினர்.
அருள்மிகு திரௌபதி அம்மன் உற்சவர் தேர் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிக்கு வருகை தந்து வீடுவீடாக தீப ஆராதனை பெற்று திருக்கோயில் திரும்பியது.
நேற்றிரவு நடைபெற்ற மகாபாரத தெருக்கூத்தில் கர்ணன் கதாபாத்திரம் ஏற்று நடித்த தெருக்கூத்துக் கலைஞருக்கும், பொன்னுருவி கதாபாத்திரம் ஏற்று நடித்த தெருக்கூத்துக் கலைஞருக்கும் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து புடவை மற்றும் பணமுடிப்பு வழங்கி விசிக நிர்வாகி சமரன் சிறப்பு செய்தார். அதேபோல் விழா சிறக்க உறுதுணையாய் நின்றவர்களையும் மரியாதை செய்து வாழ்த்தினார்.
இதேபோன்று கூத்து வாத்தியார்கள், தெரு கூத்து கலைஞர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து வேட்டி, சட்டை மற்றும் பணமுடிப்பு வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.
நிகழ்வு சிறக்க உதவிய யாவருக்கும் ஆலய பணியாளர்கள், மற்றும் காவல்துறை, ஒத்துழைப்பு நல்கிய இளைஞர்கள், பெரியோர்கள் அனைவருக்கும் மரியாதை செய்து பாராட்டுதல் அளிக்கப்பட்டது.
சுகு

