
சென்னை ஸ்ரீ சிவன் ஸார் யோக ஸபையின் கும்பாபிஷேகம்
ஸ்ரீ சிவன் ஸார் யோக ஸபையின் கும்பாபிஷேகம், வருகின்ற 2025- பிப்ரவரி 2 ம் தேதி ஞாயிறு அன்று நங்கநல்லூரில் நிகழ இருப்பதால், அந்த விசேஷ நாளை முன்னிட்டு கொண்டாட்டங்கள் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றன என்று சிவசாகரத்தின் அறக்கட்டளை குழு தலைவர் சிவராமன்-G தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஸ்ரீ சிவன் ஸார் யோக ஸபை, சனாதன தத்துவங்களில் மலர்ந்த ஒரு ஆன்மீக திருக்கோவிலாகும். இந்த புனித ஸ்தலம் பக்தர்களுக்கு ஒளிகாட்டும் விளக்காக, உள்ளொலி எழுப்பும் மணியாக பரிணமித்து அவர்களுடைய ஆன்மிக உயர்விற்கு வழிகாட்டியாக விளங்கும் என்பதில் ஐயமில்லை. “அப்பழுக்கற்ற நேர்மையே ஆன்மிகம்” (Absolute honesty is spirituality) என்பதை குறிக்கோளாகக் கொண்ட அனைவருக்கும் இது தெய்வீகமும் ஆத்மீகமும் கமழும் இடமாகத் திகழும் என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர்,
“சாச்சு…!”
இந்த வார்த்தையின் அர்த்தம் தெரியுமா? பிரும்மஸ்ரீ சதாசிவ சாஸ்திரிகள் அவர்களை குடும்பத்தினர்கள் அன்புடன் அழைக்கும் திருநாமம்.
அவரது எண்ணற்ற பக்தர்கள் என்றும் எப்போதும் அழைக்கும் பெயர் ‘ஸார்’ என்பதுதான். பற்றற்ற நிலையின் பரிபூரணமாக திகழும் ஸ்ரீ மகா பெரியவாளும் நம் ஸாரை ‘சாச்சு’ என்றே அழைப்பார். மேலும் இவரைப் பற்றி குறிப்பிடும் போது “சாச்சு பிறவிலேயே ஞானி” என்று சொல்லியிருக்கிறார்.
ஸ்ரீ சிவன் ஸார், ஈச்சங்குடி என்ற அழகிய கிராமத்தில் பிரும்மஸ்ரீ சுப்ரமணிய சாஸ்திரிகளுக்கும் மாதுஸ்ரீ மகாலக்ஷ்மி அம்மையார் என்ற புனிதத் தம்பதியினருக்கு நான்காவது திருமகனாக, இந்து சனாதன பஞ்சாங்கப்படி குரோதி ஆண்டில் புரட்டாசி மாதம் புஷ்ய நட்சத்திரத்தில் (1904 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மூன்றாம் நாள்) அவதரித்தார்.
இது புண்ய நதியான காவிரி தீரத்தக்கரையில் அமைந்துள்ள சரித்திரப் பிரசித்தி பெற்ற கர்ஜுராபுரி என்ற திருத் தலமாகும்.
ஸ்ரீ சிவன் ஸார் அவர்களின் திரு அவதாரம் பற்றி ஓர் பழந்தமிழ் ஓலைச்சுவடியில், ‘சுடர்ஜோதி ஸ்வயம் பிரகாசமான ஆனபிரான் அருட் பேராள் இவண் அகிலம் வந்தோன்’ என்று கூறப்பட்டுள்ளது. அதாவது ‘எங்கும் பிரகாசமாய் இருக்கும் எல்லாம் வல்ல பகவானின் கருணையால் ஓர் ஒளிரும் ஜோதியாக இவர் இந்த பூவுலகிற்கு வந்தார்’ என்பதே அவரது அவதார நோக்கமாகும்.
ஸ்ரீ மஹாபெரியவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஸ்ரீ சிவன் ஸார் உலக சரித்திரங்கள் பலவற்றை உள்ளடக்கிய “ஏணிப்படிகளில் மாந்தர்கள்” என்ற மகத்தான தத்துவ புத்தகத்தை படைத்தார். ஆன்மிகத்தில், உண்மைக்கும் போலிக்கும் வித்யாசம் தெரியாமல் தடுமாறும் இந்த கலியுகத்தில் இந்த புத்தகம் “ஓர் ஆன்மிக உரைகல்” என்று கற்றறிந்தோரால் பெரிதும் போற்றப்படுகிறது என்று குறிப்பிட்டார்.
ஸ்ரீ சிவன் ஸாரின் ஜெயந்தியும், ஆராதனையும் ஒவ்வொரு வருடமும் வெகு விமரிசையாக பாரதத்தின் பல மாநிலங்களில் மற்றும் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, அரபு நாட்டு பகுதிகள் உட்பட உலகின் பல பாகங்களில் கொண்டாடப்படுகிறது. அவரின் புத்தகம் உலகின் பல பகுதிகளில் தினசரி படிக்கப்படுகிறது.
அத்தகைய பல பக்தர்களின் நெடுநாள் கனவான ஸ்ரீ சிவன் ஸார் யோக ஸபை அவரருளாலே உருவாகி, அதன் கும்பாபிஷேகம் பாரத தேசத்தின் தமிழகத்தில், நங்கநல்லூர் திருத்தலத்தில் 2025 பிப்ரவரி மாதம் இரண்டாம் நாள் காலை 9.20 மணி முதல் 10.00 மணிவரை கூடிய சுப முகூர்த்தத்தில் நடைபெற உள்ளது.
மேலும் திரு.சிவராமன்-G அவர்கள், இந்தப் புனிதப் பணியில் ஈடுபாடு கொண்ட அனைவரும் இந்த சுப வேளையில் இங்கு வந்திருந்து இந்தப் புனித வேள்வியில் பங்கு பெற்று அவரருளாலே அவர்தாள் வணங்கி அவரின் அருளாசி பெற்றுக் கொள்ளும்படி பணிவன்புடன் சிவ சாகரம் டிரஸ்ட்டின் அறங்காவலர்கள் மற்றும் சேவார்த்திகளால் வேண்டி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
(வெளியீடு: சனாதன பஞ்சாங்கம்: குரோதி வருஷம், தை 1-ம் நாள்.
14-ஜனவரி-2025.)