
சென்னை சூளைமேட்டில் செயல்பட்டு வரும் ஐஃபோக்ஸ் ஐ.பி. சர்வீஸ்- எல்.எல். பி. என்ற நிறுவனம் சமையல் எல்.ஜி. பெருங்காயத்தை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், அந்த நிறுவனத்தின் பெயரில் போலியாக (கலப்படம்) எல்.ஜி. பெருங்காயம் தயாரித்து சந்தையில் சிலர், புழக்கத்தில் விட்டுள்ளதாகவும், பொதுமக்கள் ஏமாந்து தரமற்ற பெருங்காயத்தை வாங்கி உபயோகிப்பதால், தங்களது நிறுவனப் பெயர் கெடுவதாகவும்; எல்ஜி பெருங்காய நிறுவன மேலாளர் புகார் அளித்திருந்தார்.
புகாரின் பேரில் சென்னை அறிவுசார் சொத்துரிமைகள் அமலாக்கப்பிரிவு துறையினர் விசாரணை நடத்தி எல்.ஜி. பெருங்காயம் நிறுவனத்தின் பெயரில் போலியாக பெருங்காயம் தயாரித்து சந்தையில் புழக்கத்தில் விட்ட கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன், மணி, மூர்த்தி ஆகிய மூவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போலி பெருங்காயம் தயாரிக்க பயன்படுத்திய நெகிழி டப்பாக்கள், அட்டைப்பெட்டிகள், எல்.ஜி. பெருங்காயத்தின் பெயரில் போலியாக அச்சிடப்பட்ட லேபிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து மூன்று பேரையும் அயனாவரத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியாக பெருங்காயம் தயாரித்து சந்தையில் புழக்கத்தில் விட்ட வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
P.K.M.