Madras Kural

விளைநிலம் போச்சே|விவசாயி அதிர்ச்சி மரணம்|

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட செங்காத்தக்குளம், மேல்மாளிகைபட்டு உள்ளிட்ட ஆறு கிராமங்களில் உள்ள சுமார் 1.703 ஏக்கர் பரப்பளவிலான முப்போகம் விளையும் விளை நிலங்களை கையகப்படுத்தி 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி மேம்பாட்டு கழகம், சார்பில் அறிவுசார் நகரம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இத்திட்டத்திற்கு அப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நிலங்களை கையகப் படுத்துவதற்கான ஆரம்பகட்டப் பணிகளை மாவட்ட நிர்வாகம் தொடங்கி உள்ளது. இந்நிலையில் விளைநிலங்களை கையகப்படுத்தி அறிவுசார் நகரம் அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரியும், அப்பகுதி விவசாயிகளுக்கு ஆதரவாகவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் செங்காத்தக்குளம் கிராமத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு அன்புமணி முன்னிலையில் மேல்மாளிகைபட்டு கிராமத்தைச் சேர்ந்த தனபாக்கியம் என்ற பெண் விவசாயி பேசினார்.

“தனது மூன்று ஏக்கர் நிலத்தையும் அரசு கையகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் பூர்வீகமாக வேளாண் தொழிலை செய்து வரும் தனக்குச் சொந்தமான நிலத்தை கையகப் படுத்தினால் வாழ்வாதாரம் பறிபோகிவிடும்” எனவும் வேதனை தெரிவித்தார். அப்போது அவருக்கு ஆறுதல் கூறிய பாமக தலைவர் அன்புமணி ஒரு பிடி மண்ணை கூட அரசு கையகப்படுத்த விட மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்தார். தனது நிலம் பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில் கடந்த சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்த விவசாயி தனபாக்கியம், இதன் காரணமாக நேற்று இரவு மாரடைப்பால் உயிரிழந்த நிகழ்வு அப்பகுதி விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்வேலன்

Exit mobile version