Madras Kural

விஜய்யை முதல்முறை தாக்கிய உதய்…

திரைப்பட நடிகரான விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி நடத்திவருவதே அறிந்ததே. ஒவ்வொரு செய்தியாளர் சந்திப்பிலும், விஜய்யின் முதல் தாக்குதலாக திமுக மட்டுமே இருக்கிறது. பிற கட்சிகளும் லேசாக தாக்கப்படுகின்றன அவ்வளவே. விஜய் மீதும் அவருடைய கட்சிமீதும் திமுகவினர் எதிர்தாக்குதலை சமூக ஊடகங்களில் நடத்தி வருகின்றனர். திமுகவின் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் விஜய்க்கு எதிரான தாக்குதலை கையிலெடுத்தாலும் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், நெடுநாள்களாகவே அப்படியான போக்கினை கையில் எடுக்கவில்லை. வாராவாரம் விடுமுறை நாள்களில் பிரசாரபயணம் மேற்கொள்ளும் நடிகர் விஜய், “ஸ்டாலின் அங்கிள், இது நியாயமா அங்கிள்?” என்று தாக்குதலின் இன்னொரு படி நிலையைத் தொட்டபோதும் கூட மு.க.ஸ்டாலின் பெரிதாய் எதிர்வினை ஆற்றவில்லை. இந்நிலையில்தான், விஜய்யின் விடுமுறைநாள் பிரசாரத்தை கோடிட்டு, தனக்கே உரித்தான எள்ளலோடு, துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணிச் செயலாளரும்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனுமான; உதயநிதி ஸ்டாலின்; பேசத் தொடங்கியிருக்கிறார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், சர்வதேச- தேசிய போட்டிகளில் வென்ற வீரர்களுக்கு ₹21.40 கோடி ஊக்கத்தொகையை வழங்கிய உதயநிதி; “கடந்த நான்கு ஆண்டுகளில், 4,518 வீரா்களுக்கு, ரூபாய்150 கோடி உயரிய உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது; பல மாவட்டங்களுக்கு தொடர்ந்து சுற்றுப் பயணம் செல்கிறேன்; வாரத்திற்கு நான்கைந்து நாள்கள் வெளியூரில்தான் இருப்பேன்; என்று சொல்லி சின்னதாய் ஒரு பிரேக் கொடுத்து விட்டு; நான் சனிக்கிழமைகளில் மட்டும் வீட்டை விட்டு வெளியே வரும் ஆள் இல்லை” என்று கலைஞர் குசும்பாக; “தலைப்புச் செய்தி” க்கு டைட்டில் கொடுத்து விட்டு போயிருக்கிறார். “நல்ல தொடக்கம்தான். எவ்வளவு நாள்கள்தான் அப்பாவே பதில் சொல்லிக் கொண்டிருப்பது, எல்லாவற்றுக்கும் ஒரு தொடக்கமும், முடிவும் வேண்டாமா?” என்கின்றனர்; கருப்பு சிவப்பு சட்டைக்காரர்கள்…

ந.பா.சே

Exit mobile version