
“வாழ்க்கையில் யார் யார் முதுகில் குத்துவார்கள் என்று தெரியாது, என்னை தட்டிவிடாமல், தட்டிக்கொடுங்கள்” என்று ரசிகர்கள் மத்தியில் நடிகர் தனுஷ் பேசியுள்ள உருக்கமான பேச்சு, தனுஷின் அரசியல் கட்சி நகர்வுக்கான தொடங்கமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட, மஞ்சங்கரணையில் உள்ள வேல்ஸ் மருத்துவக் கல்லூரி வளாகத்தில், நடிகர் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்வில் நடிகர் தனுஷ், கலந்து கொண்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பேசிய நடிகர் தனுஷ்,
“ராயன் திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளது. ஆனால் இதற்கு முன் புதுப்பேட்டை, மயக்கம் என்ன, மரியான், வடசென்னை, கர்ணன் உள்ளிட்ட பல படங்களுக்கு தேசிய விருது கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தும் கிடைக்க வில்லை. சில விஷயங்கள் எவ்வளவு முயன்றாலும் அமையாது; அது தானாக அமையும். இந்த முறை அந்த வாய்ப்பு அமைந்தது” என்றார்.
மேலும், “இந்தப் படத்திற்கு ஏன் தேசிய விருது என்று கேட்பவர்கள், முந்தைய சிறந்த படங்களுக்கு ஏன் கிடைக்கவில்லை என்று யாரும் கேட்கவில்லை. தமிழனாக எனக்கு கிடைத்த இந்த அங்கீகாரத்திற்கு மகிழ்ச்சி. என்னைத் தட்டிவிடாமல், தட்டிக் கொடுங்கள்” என்றும், “2002-ல் ஒல்லிக்குச்சி பையனாக இருந்த என்னை ஏற்றுக் கொண்டு 24 ஆண்டுகளாக தாங்கி நிற்கும் நீங்கள் ரசிகர்கள் அல்ல, என் அசுர குடும்பம். என் ‘ரவுடி பேபீஸ்’, ஐ லவ் யூ, சோ பிரவுட் ஆஃப் யூ” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்த நடிகர் தனுஷ், “வாழ்க்கையில் யார் முதுகில் குத்துவார்கள் என்று தெரியாது. அதனால் மனவலிமை, உடல் ஆரோக்கியம் , இரண்டும் அவசியம். வீட்டுச் சாப்பாட்டை சாப்பிடுங்கள், செல்போனை குழந்தைகளுக்கு கொடுக்காதீர்கள். அவர்களை வெளியில் விளையாட விடுங்கள். மன அமைதிக்காக தியானம் செய்யுங்கள். ‘எண்ணம் போல் வாழ்க்கை’ என்று உங்களுக்குள் பேசும் குரலே கடவுள். தியானத்தை முறையாகக் கற்றுக்கொண்டு செய்தால் வாழ்க்கை மாறிவிடும்” என்று ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கிய அவர், நடிகர் அஜித்தின் வாசகத்தை மேற்கோள் காட்டி, “நீயே உன் தோல்வியை ஒப்புக் கொள்ளும் வரை உன்னை யாராலும் தோற்கடிக்க முடியாது” என்றும், தனது பிறந்த நாளை முன்னிட்டு, ரத்ததானம் வழங்கிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த வேல்ஸ் கல்விக்குழுமங்களின் தலைவரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ், மருத்துவர்கள் குழுவுக்கு நன்றி தெரிவித்து தனது உரையை நிறைவு செய்தார். தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கட்சி தொடங்கி இரண்டே ஆண்டுகளில் தனித்து நின்று 2026 தேர்தலை எதிர் கொண்டு திமுக – அதிமுக ஆகிய இரண்டு திராவிட கட்சிகளை தோற்கடித்து, ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார். இந்த நிலையில் தற்போது நடிகர் தனுஷ், தனது ரசிகர் மன்றத்திற்கு என வெள்ளை – சிகப்பு நிறத்தின் நடுவில் நட்சத்திரம் குறிக்கப்பட்டு அதன் நடுவே தனது உருவப்படம் இருப்பது போன்று கொடியை அறிமுகப்படுத்தினார், விஜய் பாணியில் அரசியல் கட்சி தொடங்குவதற்கான திட்டத்துடன் தனது ரசிகர் மன்றங்களை தமிழகம் முழுவதும் ஒருங்கிணைத்து அதன் பின் தமிழகம் முழுவதும் விரைவில் மாவட்ட வாரியாக சென்று ரசிகர்களை சந்தித்து தனது மன்றங்கள் மூலம் நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்தி அதில் பங்கேற்று அதன் மூலம் மக்களை சந்திப்பதற்கான திட்டத்தை வகுத்து வருவதாக. தகவல்கள் வெளியாகி உள்ளது. 2031 ஆம் ஆண்டுக்குள் நடிகர் தனுஷ் அரசியல் கட்சி தொடங்குவார் என்ற எதிர்பார்ப்புடன் அவரது ரசிகர்கள் உள்ளனர். முன்னதாக இந்த நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா செய்தியை சேகரிக்க செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்பதையும் இங்கு குறிப்பிடவேண்டும்…
பொன்.கோ.முத்து