
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கண்ணாடி தொழிற்சாலையில் வீட்டு உபயோக அலங்கார கண்ணாடி பொருட்கள், ஜன்னல், அலுவலக கதவுகள் ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படும் கண்ணாடி ஆகியவற்றை உற்பத்தி செய்து தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந் நிலையில் நித்திஷ் என்ற ஓட்டுநர் கப்பல் மூலம் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ய வேண்டிய அலங்கார கண்ணாடி பொருட்களை ஏற்றிக்கொண்டு அங்கிருந்து சென்னை துறைமுகம் நோக்கி வந்து கொண்டிருந்தபோது மஞ்சம்பாக்கம் பகுதியில் தாறுமாறாக பெட்டக சரக்குந்து (கன்டெய்னர் லார செல்வதை கண்டு பின்னால் மகிழுந்தில் (கார்) வந்து கொண்டிருந்த ஒருவர் அதை தனது கைபேசியில் படம் பிடித்தபடி பயணித்துள்ளார்
மணலி எம்.எஃப்.எல் வளைவு சாலையில் திரும்பும் போது நிலை தடுமாறிய பெட்டக சரக்குந்து, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த கண்ணாடி பொருட்கள் உடைந்து சாலையில் சிதறின.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இதுகுறித்து தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வுத்துறை அதிகாரிகள், அஜாக்கிரதையாக வாகனத்தை ஒட்டி விபத்தை ஏற்படுத்திய சரக்குந்து ஓட்டுனரை கைது செய்தனர், மேலும் சாலையில் கவிழ்ந்த சரக்குந்தை கிரேன் உதவியுடன் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். சாலையில் உடைந்து சிதறி கிடந்த கண்ணாடி துகள்களை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். பெட்டக சரக்குந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான நேரடி காணொளி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
P.K.M.