
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் விஜயகுமார், தனது ஆதரவாளர்களுடன், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியரும்-தேர்தல் நடத்தும் அலுவலருமான வெங்கடேசனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதே போன்று கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினரும், திமுக வேட்பாளருமான டி.ஜே. கோவிந்தராஜன், வேட்பு மனு தாக்கல் செய்தார். அதேபோல், அதிமுக வேட்பாளர் வி. சுதாகர், வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தபோது, வேட்பு மனு தாக்கல் செய்து விட்டு தேர்தல் அலுவலர் அறையில் இருந்து வெளியே வந்த திமுக வேட்பாளர் டி.ஜே. கோவிந்தராஜை நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்தது. அதிமுக வேட்பாளர் சுதாகர் அப்போது, திமுக வேட்பாளர் டி ஜே. கோவிந்தராஜனுக்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவித்ததோடு, அவரது காலில் விழுந்தும் ஆசி பெற்றார். தேர்தல் களத்தில், எதிரும் புதிருமான ஆளும் திமுக வேட்பாளரின் காலில் எதிர்க்கட்சியான அதிமுக வேட்பாளர் விழுந்து ஆசி பெற்ற நிகழ்வு இரு கட்சி தொண்டர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அதிமுக வேட்பாளர் வி. சுதாகர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். முன்னதாக வேட்பாளர்கள் அனைவரும் தேர்தல் நடத்தும் அலுவலர் முன்பாக உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
தமிழ்முத்து